thiruvannamalai barani deepam

கார்த்திகை திருநாளை முன்னிட்டு இன்று அதிகாலை திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படவுள்ளது.

பஞ்ச பூதங்களில் நெருப்புக்குரிய தலமாக திகழ்வது திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் கோவில்.

இந்த திருத்தலத்தில் கார்த்திகை திருநாள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் தீபத்திருவிழா கடந்த மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதில் முக்கிய நிகழ்வான பரணி தீபம், ஏற்றும் நிகழ்ச்சி இன்று அதிகாலை வெகு விமர்சையாக நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. கோயிலுக்குப் பின்புறமுள்ள 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

இதையொட்டி மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரையை புதுப்பித்து தீப நாட்டார் சமூகத்தினர் அண்மையில் கோயிலில் ஒப்படைத்தனர்.

நெய், காடா துணி தயார்: இதேபோல, மகா தீபம் ஏற்றத் தேவையான 3,500 கிலோ நெய், ஆவின் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு கோயிலில் தயாராக இருந்தது.

தீபம் எரிய திரியாகப் பயன்படுத்தப்படும் 11 ஆயிரம் மீட்டர் காடா துணிக்கு கோயிலில் நேற்று முன்தினம் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.

இதையடுத்து கொப்பரை, நெய், காடா துணி ஆகியவை நேற்று மாலை 2,668 அடி உயர மலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படடன. இன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படவுள்ளது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் பாதுகாப்புப் பணியில் 8,500 போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

திருவிழாவையொட்டி சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து சிறப்பு பேருந்துகளும், ரயில்களும் இயக்கப்படுகின்றன.