Thieves arrested for theft from women 25 pounds jewels confiscated

கரூர்

கரூரில் கை செலவுக்காக பெண்களின் கழுத்தில் கிடக்கும் தாலி சங்கிலிகளை பறித்து கொள்ளையில் ஈடுபட்ட திருடர்கள் இருவரை காவலாளர்கள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 25½ சவரன் தங்க நகைகளை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.

கரூர் மாவட்டம், வடக்கு காந்திகிராமத்தில் இ.பி.காலனி பகுதியைச் சேர்ந்தவர் லதா (35). இவர் வீட்டில் தனியாக இருந்தபோது இருவர் முகத்தை துணியால் கட்டிக்கொண்டு முகவரி கேட்பதுபோல லதாவின் கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தாலியை பறித்துக்கொண்டு ஓடினர். 

இது குறித்து பசுபதிபாளையம் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் குளந்தானூர் டாஸ்மாக் பாரில் நேற்று இருவர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து கொண்டு தப்பிச் செல்வதாக பசுபதிபாளையம் காவலாளர்களுக்கு தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து காவலாளர்கள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் வாகன சோதனையில் ஈடுபட்டபோது மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படி வந்த கரூர் நீலிமேடு பகுதியைச் சேர்ந்த மதன்குமார்(20), ராமகிருஷ்ணபுரத்தை சேர்நத விக்கி என்கிற விக்னேஷ் (21) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். 

இதில் இருவரும் பசுபதிபாளையம், வெங்கமேடு, வாங்கல் பகுதிகளில் பெண்களிடம் தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து மதன்குமார், விக்கி ஆகிய இருவரையும் காவலாளர்கள் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 25½ சவரன் தங்க நகைகளையும், ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் பாலிடெக்னிக் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் எனவும், கை செலவுக்காக சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் காவலாளர்கள் விசாரணையில் தெரியவந்தது.