இந்திய ஆட்சிப் பணி வட இந்திய ஆட்சிப் பணி என்று மாறிவிட்டால் இந்தியாவில் ஒருமைப்பாடு இருக்காது-வைரமுத்து வேதனை
அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கவிப்பேரரசு வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
வடநாட்டு ஆதிக்கம்
சென்னை அண்ணா நகரில் ஐஏஎஸ் அகெடமியைப் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் திறந்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, இந்திய அளவில் கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்து ஐ.ஏ.எஸ் பதவிகளுக்கு தேர்ச்சி ஆகும் சதவீதம் குறைந்துள்ளதாகவும், இத்தனை ஆண்டுகளாக சற்றே மேம்பட்ட தேர்ச்சி சதவீதம் ஏன் குறைகிறது என்று நாம் கவலையோடும் சிந்திக்க வேண்டும் என தெரிவித்தார். இந்திய ஆட்சிப் பணி என்பது வட இந்திய ஆட்சிப் பணி என்று மாறிவிட்டால் இந்தியாவின் ஒருமைப்பாடு இருக்காது என்றும் வடநாட்டு ஆதிக்கம், இந்தி ஆதிக்கம் மேலோங்கி உள்ளதால் தமிழ் மாணவர்கள் வஞ்சிக்கப்படுகிறார்களா? என்ற கேள்வியை எழும்புகிறது என்றும் தெரிவித்தார்.
அக்னிபத் மறுபரிசீலனை
இந்திய அளவில் தமிழ் மாணவர்கள் இளைத்தவர்கள் அல்ல சளைத்தவர்கள் அல்ல என்று கூறிய அவர் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இளைஞர்கள் அரசியல் கடந்து போராடுகிறார்கள் இதை மத்திய அரசு சிந்திக்க வேண்டும் என்றும் வைரமுத்து கேட்டு கொண்டார்.