மூன்று ரேசன் கடைகளுக்கு ஒரே ஒரு பணியாளர் தான் இருக்காரு; பணியாளர்களை நியமிக்க கோரிக்கை…
நாமக்கல்
கூனவேலம்பட்டிபுதூர் பகுதியில் மூன்று நியாய விலைக் கடைகளுக்கும் ஒரே ஒரு பணியாளர் இருப்பதால் போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று வட்ட வழங்கல் அலுவலருக்கு திமுக கிளை செயலர் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம், கூனவேலம்பட்டி திமுக கிளைச் செயலர் மா.சரவணன், வட்ட வழங்கல் அலுவலருக்கு நேற்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
அதில், “கூனவேலம்பட்டிபுதூர் பகுதியில் 1700 குடும்ப அட்டைகள் உள்ளன. இந்தப் பகுதியில் மூன்று நியாய விலை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் மூன்று பணியாளர்கள் இருந்துவந்த நிலையில் பணியாளர் ஒருவர் ஒய்வுப் பெற்றுவிட்டார். ஒருவர் பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனால் ஒரு பணியாளர் மட்டுமே மூன்று நியாய விலைக் கடைகளையும் பார்த்துக் கொள்ள வேண்டி உள்ளது.
இதனால், மக்களுக்கு பொருள்கள் பெறுவதில் மிகுந்த காலதாமதம் ஏற்படுகிறது. அப்பகுதி நெசவாளர்கள் தங்களது தொழிலை விட்டு விட்டும், பணிக்கு விடுமுறை எடுத்தும் நீண்டநேரம் காத்திருந்து பொருள்கள் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, நியாய விலைக் கடைக்கு போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.