ரூ.2.60 இலட்சம் பணம் திருட்டுப் போனதால், மனமுடைந்த லாரி ஓட்டுநர் சேலையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

சிதம்பரம் அருகே உள்ள கீழ்புவனகிரி தாமரைக்குளம் தெருவைச் சேர்ந்தவர் பூமிநாதன் (32). லாரி ஓட்டுநர். இவர், கன்னியாகுமரி கூட்டபள்ளியில் வியாபாரி சூடு என்பவரிடம் இருந்து ஒப்பந்த முறையில் லாரியில் மீன் ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம், குன்றுக்குட்டிக்குச் செல்வது வழக்கம். அங்கு மீனை இறக்கிவிட்டு பணம் வாங்கி வருவாராம்.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி கேரளாவில் வழக்கம்போல் மீனை இறக்கிவிட்டு, பணம் ரூ.2.60 இலட்சம் பெற்றுக்கொண்டு புறப்பட்டார். கேரள மாநிலம், அம்பளப்புழாவில் லாரியை நிறுத்திவிட்டு பூமிநாதன் தூங்கியபோது பணம் மாயமானதாம். இதுகுறித்து அங்குள்ள காவல்துறையினரிடம் புகார் அளித்தும் வழக்குப் பதிவு செய்யவில்லை.

இந்த நிலையில், ஒப்பந்ததாரர் சூடு, காணாமல் போன பணத்துக்கு பூமிநாதன்தான் பொறுப்பு எனக்கூறி லாரியை பிடித்துக் கொண்டு அவரை அனுப்பிவிட்டாராம். இதில் மனமுடைந்த பூமிநாதன் சனிக்கிழமை தனது வீட்டில் சேலையால் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

தகவலறிந்த புவனகிரி காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பணம் திருடுபோனது குறித்து ஒப்பந்ததாரர் மிரட்டியதால்தான் பூமிநாதன் தற்கொலை செய்துகொண்டார். எனவே, ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி பூமிநாதனின் உறவினர்கள் சடலத்தை பெற மறுத்து சிதம்பரம் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.