கடந்த 12 ஆண்டுகளாக தமிழகத்தில் போலியோ இல்லை – அடித்துக் கூறும் சுகாதாரத் துறை செயலாளர்…
திருவள்ளூர்
கடந்த 12 ஆண்டுகளாக தமிழகம் போலியோ இல்லாத மாநிலமாக திகழ்கிறது என தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் அடித்துச் சொல்கிறார்.
திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில், இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று நடைப்பெற்றது.
இந்த முகாமை தமிழகச் சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.இராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியது:
“கொடுமையான போலியோ நோய்களை முழுமையாக ஒழிப்பதற்க்குத் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்கள் 1995-ஆம் ஆண்டு முதல் சர்வதேச அளவில் நடைபெற்று வருகிறது.
கடந்த 12 ஆண்டுகளாக போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. மேலும், மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், இரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஆயிரத்து 652 தற்காலிக மையங்களும், ஆயிரம் நடமாடும் சொட்டு மருந்து மையங்களும் செயல்பட்டு வருகின்றன.
இப்பணிகளில் 2 இலட்சம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இம்முகாம்கள் மூலம் 70 இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மக்கள் அனைவரும் இம்முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி கூறியது:
"திருவள்ளூர் மாவட்டத்தில் ஐந்து வயதுக்கு உள்பட்ட சுமார் 2 இலட்சத்து 39 ஆயிரத்து 189 குழந்தைகளுக்கு ஆயிரத்து 259 நிலையான மையங்களிலும், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் 44 மையங்கள், 40 நடமாடும் மையங்கள் என ஆயிரத்து 343 மையங்கள் மூலம் போலியோச் சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.
மேலும், செங்கல்சூளைகள், பெரிய அளவிலான கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்கள், குடிசைப் பகுதிகள் ஆகிய இடங்களிலுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் சொட்டுமருந்து வழங்கப்படவுள்ளது” என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மோகனன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஜே.பிரபாகரன், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் செந்தில்குமரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.