குவைத் தீ விபத்தில் 40 இந்தியர்கள் பலியாகியுள்ள நிலையில், அதில் 5 பேர் தமிழர்கள் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து தீ விபத்தில் காயம் அடைந்த தமிழர்களின் மருத்துவமனை செலவை அயலக நலத்துறையே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் தீ விபத்து- 5 தமிழர்கள் பலி

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

குடும்ப வறுமையை போக்க பொருளாதாரம் தேடி, தமிழ்நாடு, கேரளா என இந்தியாவைச் சேர்ந்த பலர், குவைத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், குவைத் நாட்டின் மங்காப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பெற்றெடுத்த பிள்ளையை, கணவனை இழந்து பெற்றோருக்கும், உறவினர்களும் தவித்து வருகின்றனர். இந்த தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

அதில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் முட்டத்தைச் சேர்ந்த சின்னதுரை, ராமநாதபுரம் மாவட்டம் தென்னவனூர் கிராமத்தைச் சேர்ந்த கருப்பணன் ராமு, கோவில்பட்டியை சேர்ந்த வீராசாமி மாரியப்பன், செஞ்சியை சேர்ந்த முகமது ஷரீப், பட்டுக்கோட்டையை சேர்ந்த புனாஃப் ரிச்சர்டு ராய் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை

மேலும் இந்த தீ விபத்தில் சிக்கி 50க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ள நிலையில், அவர்களில் பெரும்பாலான தமிழர்கள் இருப்பார்கள் என அஞ்சப்படுகிறது. இந்தநிலையில் இது தொடர்பாக தமிழர் அயலக நலத்துறை கூறுகையில், குவைத் தீ விபத்தில் காயமடைந்த தமிழர்கள் விவரம் கிடைக்கப்பெற்ற பின் காயமடைந்தவர்களுக்கான மருத்துவச் செலவை அயலக தமிழர் நலத்துறை வாரியம் ஏற்று மருத்துவ சிகிச்சை அளிக்கும் என தெரிவித்துள்ளது.

மேலும், குவைத் நாட்டில் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் தங்கி இருக்கக்கூடிய குடியிருப்புகளில் வீட்டின் உரிமையாளர்கள் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற உத்தரவிட வேண்டும் இதனை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் குவைத் நாட்டு அரசிடம் அயலக தமிழர் நல வாரியம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. தீவிபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் எண்களைத் தொடர்பு கொள்ளவும்: 

இந்தியாவிற்குள்: +91 1800 309 3793

வெளிநாடு: +91 80 6900 9900, +91 80 6900 9901