கர்நாடகா அரசை, உச்ச நீதிமன்றம் கலைக்க வேண்டும் - விவசாயிகள் சங்க தலைவர் ஐயாக்கண்ணு வேண்டுகோள்...
வேலூர்
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கவில்லை என்றால் கர்நாடகா அரசை, உச்ச நீதிமன்றம் கலைக்க வேண்டும் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் ஐயாக்கண்ணு கேட்டுக் கொண்டார்.
விவசாய பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களை பேருந்து பயணிகள் மற்றும் மக்களிடம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ஐயாக்கண்ணு மற்றும் விவசாயிகள் நேற்று வழங்கினர்.
அதன்பின்னர், ஐயாக்கண்ணு வேலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், "காவிரி தோன்றும் தலைக்காவிரி ஒருகாலத்தில் தமிழகத்திற்குச் சொந்தமானதாக இருந்தது. தற்போது கர்நாடகா அரசு ஒப்பந்தத்தை மீறி காவிரியின் குறுக்கே பல அணைகளை கட்டிவிட்டனர்.
1978-க்கு பிறகு கர்நாடகாவில் 40 இலட்சம் முதல் 50 இலட்சம் ஏக்கர் வரை விவசாயம் செய்கின்றனர். தமிழகத்தில் 25 இலட்சம் ஏக்கர் விவசாயம் செய்யப்பட்டது. தற்போது 10 இலட்சம் ஏக்கரில் விவசாயம் செய்கிறோம்.
இன்னும் ஒருவாரத்தில் காவிரியில் தண்ணீர் திறக்கவில்லை என்றால் 10 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் செய்யப்பட்டுள்ள விவசாயம் அழிந்துவிடும்.
விவசாயிகள் பெற்றுள்ள ரூ.25 ஆயிரம் கோடி கடனை திருப்பி செலுத்தமுடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
கர்நாடகாவில் விரைவில் தேர்தல் வருகிறது. எனவே, ஓட்டுக்காக தமிழர்களை வஞ்சிக்கிறார்கள்.
காவிரி நதிநீர் பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் நல்லதீர்ப்பை வழங்கியிருக்கிறது. காவிரிநீர் இரு மாநிலங்களுக்கும் சொந்தமானதல்ல. பொதுவானது என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும். இனி காவிரி தண்ணீரை கர்நாடகா அரசு திருடவோ, கொள்ளையடிக்கவோ முடியாது.
15 டி.எம்.சி. தண்ணீர் குறைவாக இருந்தாலும் இனி தமிழகத்திற்கு காவிரியில் நிரந்தரமாக தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கவில்லை என்றால் கர்நாடகா அரசை, உச்ச நீதிமன்றம் கலைக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.