டிடிவி மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு – விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு…
டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கில் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது எனவும் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1996 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து தொலைகாட்சி மற்றும் தொலை தொடர்பு சாதனங்கள் வாங்கியதி மொசடி செய்ததாக சசிகலா, டிடிவி தினகரன், அவரது உறவினர் பாஸ்கரன் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இது தொடர்பாக ஏழு வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், இரண்டு வழக்குகளில் இருந்து டிடிவியை நீதிமன்றம் விடுவித்தது. அதன்படி இன்னும் ஐந்து வழக்குகள் தினகரன் மீது நிலுவையில் இருந்தது.
இதுகுறித்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் டிடிவி தினகரனை விடுவித்தது. ஆனால் கீழமை நீதிமன்றங்களின் இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறையினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தினகரனை தொடர்ந்து விசாரணை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இத்தகைய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தினகரன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதில் விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் என கோரியிருந்தது. இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் அந்நிய செலாவணி வழக்கில் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது எனவும் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் கோரி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.