The struggle to implement rural employment guarantee in the panchayat areas Thousands of women gathered

தருமபுரி

ஊரக வேலை உறுதித் திட்டத்தை பேரூராட்சிகளில் அமல்படுத்த வேண்டி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடந்த போராட்டத்தில் பத்து பேரூராட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.

கிராமப்புற ஊராட்சிகளில் ஊரக வேலை உறுதிதிட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை பேரூராட்சிப் பகுதிகளிலும் அமல்படுத்தி ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடைப்பெற்றது.

இந்தப் போராட்டத்திற்கு மாநிலச் செயலாளர் அமிர்தலிங்கம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் அர்ச்சுனன், மாவட்டச் செயலாளர் முத்து, மாவட்டப் பொருளாளர் முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மாரிமுத்து, மாவட்டச் செயலாளர் குமார், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் மல்லையன், மாதர்சங்க மாவட்டச் செயலாளர் கிரைசாமேரி உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

“தமிழகத்தில் உள்ள 528 பேரூராட்சிகளில் வசிக்கும் 1 கோடி மக்களில் 90 சதவீதம் பேர் விவசாயத்தையும், விவசாயம் சார்ந்த கூலி வேலைகளையும் நம்பி வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.

கடும் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விவசாய தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் வகையில் ஊரக வேலை உறுதிதிட்டத்தை பேரூராட்சி பகுதிகளில் தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்.

கடந்த 2005–ஆம் ஆண்டு தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பேரூராட்சிகளில் அமல்படுத்தப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்” என்று பேசினர்.

மேலும், இந்தப் போராட்டத்தில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பத்து பேரூராட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் திரளாக பங்கேற்றனர்.

இந்த்ப் போராட்டத்தின் இறுதியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.