‘சேலம் போலீசில் புகார் செய்தால்’; அமெரிக்காவில் இருந்து பதில் வருதே! ஆட்டோ கட்டணம் உயர்வுக்கு டுவிட் செய்த இளைஞருக்கு அதிர்ச்சி
ஆட்டோ கட்டணம் உயர்வுக்கு சேலம் போலீசிடம் ஒரு இளைஞர் டுவிட்டரில் புகார் செய்ததற்கு, அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தில் உள்ள சலேம் மாவட்ட போலீசார் பதில் அளித்துள்ளனர்.
கேரள மாநிலம் , கொச்சியைச் சேர்ந்தவர் டி.ஏ.அருணானந்த். இவர் சமீபத்தில் சேலம் மாவட்டம் ஏற்காடு சென்றார். அங்கு ஒரு ஆட்டோவை வாடக்கைக்கு எடுத்தபோது, 1.5 கி.மீ செல்ல ரூ.50 கட்டணத்தை ஆட்டோ டிரைவர் கேட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அருணானந்த் இது குறித்து டுவிட்டரில் சேலம் போலீசுக்கு புகார் அளிக்க முடிவு செய்தார். இதற்காக டுவிட்டரில் சேலம் போலீஸ் என ‘ஹேஸ்டேக்’ செய்து புகாரை பதிவிட்டார்.
“ சேலம் போலீஸ் துறை அதிகாரிகளே(@SalemPoliceDept) ஏர்காட்டில் ஆட்டோ டிரைவர்கள் எப்படி கட்டணக் கொள்ளை அடிக்கிறார்கள் தெரியுமா? 1.5.கி.மீ செல்ல 50 ரூபாய் கேட்கிறார்கள். இதுபோன்ற பிரச்சினைகளை கவனிக்க மாட்டீர்களா?. தமிழக முதல்வர் (cmo) ஏர்காட்டுக்கு வர வேண்டும். சேலம் போலீசார் இங்கு வந்து பார்த்து பதில் அளியுங்கள் ’’ எனப் பதிவிட்டார்.
ஆனால், (@SalemPoliceDept) என்ற முகவரி, அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தில் உள்ள சலேம் போலீஸ் துறையின் அதிகாரப்பூர்வ முகவரி என்பதை அந்த அருணானந்த் அறிந்திருக்கவில்லை.
இந்த டுவிட்டைப் பார்த்த அமெரிக்காவின் சலேம் போலீஸ் துறை, உடனே அருணானந்துக்கு டுவிட்டுக்கு பதில் அளித்தனர். “ நாங்கள்தான் சலேம் போலீஸ் துறை, அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தில் உள்ள சலேம் நகரில் இருந்து பேசுகிறோம் . உங்களின் தேவை என்ன?’’ எனக் கேட்டனர்.
இதைப்பார்த்த அருணானந்த் அதிர்ச்சி அடைந்து, அமெரிக்காவில் சலேம் என்ற நகர போலீசார் என அறிந்து, தனது தவறை உணர்ந்தார்.
அதன்பின் சலேம் போலீசாருக்கு அருணானந்த் பதில் அளித்து டுவிட் செய்தார், அதில் “அமெரிக்காவில் ‘சலேம்’ என்ற நகர போலீசார் இருப்பதை அறிந்தேன். இந்தியாவின் தமிழகத்தில் ‘சேலம்’ என்று மாவட்டம் இருக்கிறது. ஆனால், உங்களுக்கு என நினைத்து எந்த புகாரையும் அனுப்பவில்லை. எனது பதிவுக்கு உடனுக்குடன் பதில் அளித்த சலேம் போலீசாருக்கு நன்றி. வாழ்த்துக்கள்’’ எனத் தெரிவித்தார்.
அடுத்த டுவிட்டில் அருணானந்த் “ ஓரிகன் மாநிலத்தில் மெட்ராஸ் எனும் நகரம் இருக்கிறதா? இது தமிழகத்தின் தலைநகரம் ’’ எனக் கேட்டார்.
அதற்கு சலேம் போலீசார் பதில் அளிக்கையில், “ ஆம், இங்கு இருக்கிறது. எங்கள் மாநிலத்தின் மற்றொரு பகுதியாகும். சலேம் நகரில் இருந்து தொலைவில் இருக்கிறது ‘மெட்ராஸ்’ நகரம். டுவிட்டர் கணக்கு நம் சமூதத்தினர் அனைவரும் ஒன்றாக இணைவதற்கும், புரிந்து கொள்வதற்கும் நல்ல வாய்ப்பு. உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்’’ என்று தெரிவித்தனர்.
மெட்ராஸ் என்பது தற்போதுள்ள சென்னையின் பழைய பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் போலீசாருக்கு புகார் செய்து, அமெரிக்காவின் சலேம் நகரில் இருந்து பதில் உடனடியாக வந்துவிட்டது. அவர்களுடன் அருணானந்த் நட்புறவே வைத்துவிட்டார்.
ஆனால், இன்னும் தமிழகத்தின் சேலம் போலீசிடம் இருந்து, அருணானந்துக்கு இன்னும் ஒரு பதில்கூட வரவில்லை பாருங்கள். எப்படி இருக்காங்க பாருங்க..நம்ம ஆளுங்க...