விவசாய நிலங்களில் மணல் குவாரி அமைத்து மணல் கடத்துவதைத் தடுக்க வேண்டும் - தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்...
தேனி
விவசாய நிலங்களில் மணல் குவாரிகள் அமைத்து வெளி மாவட்டங்களுக்கு மணல் அள்ளி கடத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி தேனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
தேனி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட மாநாடு கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் நேற்று நடைப்பெற்றது.
இந்த மாநாட்டிற்கு மாநிலக் குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் தலைமைத் தாங்கினார். மாவட்டச் செயலர் டி. வெங்கடேசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் பெ. சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், "அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் பல ஆண்டுகால கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
வைகை அணை, சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை ஆகியவற்றை தூர்வாரி அணைகளின் முழு கொள்ளளவில் தண்ணீர் தேக்க வேண்டும்.
மேற்குத் தொடர்ச்சி மலையடிவார விவசாய நிலங்களில் வன விலங்குகள் புகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போடி - மதுரை அகல இரயில் பாதை திட்டத்துக்கு முழுமையாக நிதி ஒதுக்கி பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்.
விவசாய நிலங்களில் மணல் குவாரிகள் அமைத்து வெளி மாவட்டங்களுக்கு மணல் அள்ளி கடத்தப்படுவதைத் தடுக்க வேண்டும்.
கடமலைக்குண்டு - வெள்ளிமலை சாலையை சீரமைக்க வேண்டும்.
தேனியில் சட்டக் கல்லூரி தொடங்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.