இரண்டு ஆண்டுகளாக சம்பளம் வழங்காததால் ரேசன் கடை ஊழியர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி...
திருவாரூர்
இரண்டு ஆண்டுகளாக சம்பளம் வழங்காததால் விரக்தியடைந்த ரேசன் கடை ஊழியர் குடும்பத்துடன் திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே துறைக்காடு ரேசன் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்தவர் மாரிமுத்து. இவர் நேற்று தனது மனைவி, மகன், மகளுடன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மண்ணெண்ணெய் கேனுடன் மாரிமுத்து வருவதைக் கண்டு சந்தேகமடைந்த திருவாரூர் தாலுகா காவலாளர்கள் அவரை பிடித்து முதலில் மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். மேலும், அவரிடம் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், "முத்துப்பேட்டை அருகே துறைக்காடு ரேசன் கடையில் கடந்த 1987-ஆம் ஆண்டு முதல் உதவியாளராக பணியில் வந்து சேர்ந்துள்ளார். அதன்பின்னர் 1995-ஆம் ஆண்டு முதல் விற்பனையாளராக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வந்தார். அப்போது ரேசன் கடையில் நடைபெற்ற முறைகேடுகளை தட்டி கேட்டுள்ளார்.
இதனையடுத்து அவருக்கு சம்பளம் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டு இடைக்காலமாக பணியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
மாரிமுத்து தன்னை எதற்காக பணியில் இருந்து நீக்கம் செய்தீர்கள்? எனவும் இரண்டு ஆண்டுகளாக வழங்காத சம்பளத்தை உடனே வழங்க வேண்டும்" எனவும் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த மாரிமுத்து வேலையையும், சம்பளத்தையும் வழங்க வேண்டி நேற்று தனது மனைவி, மகன், மகள் ஆகியோருடன் மண்ணெண்ணெய் கேனுடன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்துள்ளார் என்று தெரிந்தது. பின்னர் திருவாரூர் தாலுகா காவலாளர்கள் அவரை சமாதானம் செய்து அழைத்து சென்றனர்.