ரூ. 11 லட்சம் மோசடி செய்த அதிமுக பிரமுகர்...! மனமுடைந்த நபர் தீக்குளிப்பு...!
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.11 லட்சம் மோசடி செய்த அதிமுக பிரமுகரை போலீசார் தேடி வருகின்றனர். பணத்தை கொடுத்து ஏமாற்றமடைந்த நபர் தீக்குளித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் கனகராஜ். இவர் சைக்கிள் கடை நடத்தி வருகிறார்.
அதேபகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் கல்யாணி என்பரிடம் தனது உறவுக்கார பையனான சித்தார்த் என்பவருக்கு அரசு வேலை வாங்கி தரக்கோரி ரூ. 11 லட்சம் பணம் கொடுத்துள்ளார்.
இதற்காக கலையாணி பணிநியமன ஆணை வழங்கியுள்ளார். ஆனால் கல்யாணி வழங்கிய ஆணை போலி என தெரிய வந்ததையடுத்து தமது பணத்தை திருப்பி கேட்டுள்ளார் கனகராஜ்.
ஆனால் அடுத்த ஆண்டிற்குள் வேலை வாங்கி தருவதாகவும் தற்போது தன்னிடம் பணம் இல்லை என கூறியும் கல்யாணி இழுக்கடித்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், மனமுடைந்த கனகராஜ் கலையாணி வீட்டின் முன்பு உடலில் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதித்தனர். இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பணத்தை தராமல் இழுக்கடித்து வரும் கல்யாணியை கைது செய்ய வேண்டும் எனவும் பணத்தை திரும்பி பெற்று தர வேண்டும் எனவும் அவரது உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.