காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப கோரி மருந்தாளுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்...
திருவாரூர்
காலியாக உள்ள 1000 மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் மருந்தாளுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் தியாகராஜன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் பைரவநாதன், மாவட்ட அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "காலியாக உள்ள 1000 மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
பதவி உயர்வில் தேக்க நிலையை மாற்றி மருந்தாளுநர்களுக்கு கூடுதலாக மூன்று கட்ட பதவி உயர்வு வழங்க வேண்டும்.
42 மருந்து கிடங்கிற்கு தலைமை மருந்தாளுனர் பணியிடம் உருவாக்கிட வேண்டும்.
மருத்துவக்கோடு விதிகளின் படி கூடுதல் மருந்தாளுநர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைத்து மருந்தாளுனர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர், குடவாசல், நன்னிலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த அரசு மருத்துவமனை மருந்தாளுனர்கள் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர்.