வேலூரில் 1655 மையங்களில் இளம் வாக்காளர்களுக்கான பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்; ஆட்சியர் ஆய்வு…
வேலூர்
வேலூரில் இரண்டாவது கட்டமாக 1655 மையங்களில் நடைப்பெற்ற இளம் வாக்காளர்களுக்கான பெயர் சேர்ப்பு சிறப்பு முகாமை ஆட்சியர் ராமன் நேரில் ஆய்வு செய்தார்.
வேலூர் மாவட்டத்தில் 18 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளம் வாக்காளர்கள் பெயர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் கடந்த 9–ஆம் தேதி நடைபெற்றது.
இதனையடுத்து இரண்டாவது கட்டமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 627 வாக்குச்சாவடி மையங்கள், 13 தாலுகா அலுவலகங்கள், 12 நகராட்சி அலுவலகங்கள் மற்றும் மூன்று வருவாய் கோட்ட அலுவலகங்கள் என மொத்தம் ஆயிரத்து 655 மையங்களில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நேற்று நடந்தது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்த இந்த முகாமில் 18 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளம் வாக்காளர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவத்தை பூர்த்தி செய்து வழங்கினர்.
படிவத்தில், பெற்றோரின் வாக்காளர் அடையாள அட்டை எண் குறிப்பிட வேண்டும். மேலும் இளம் வாக்காளர்களுக்கான ஆதார் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படம் இணைத்து கொடுக்கப்பட வேண்டும் என்பன போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.
அதன்படி, புதிய வாக்காளர்களும் தங்களது படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து பெயர் சேர்க்க ஆர்வம் காட்டினர்.
வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி முகவர்கள் ஒருங்கிணைந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கொடுத்த படிவங்களில் இருந்த தவறுகள், திருத்தங்களை கண்டறிந்து வாக்காளர்களிடம் இருந்து படிவங்களை பெற்றுக் கொண்டனர்.
வேலூர் சத்துவாச்சாரி வள்ளலாரில் உள்ள ஹோலிகிராஸ் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாமை ஆட்சியர் ராமன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது பெறப்பட்ட விண்ணப்பத்தின் மீது வருவாய்த்துறை அதிகாரிகள் விரைவில் விசாரணை நடத்தி, வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும் புதிய வாக்காளர்களுக்கு படிவம் 6–யை வழங்கினார்.