அரசே அவதூறு செய்திகளை பரப்பலாமா..? - தமிழக அரசை லெஃப்ட் ரைட் வாங்கிய ஹைகோர்ட்...!
மதுக்கடைகளை திறக்கும் விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தில், தமிழக அரசு தவறான தகவல்களை தெரிவித்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து மதுக்கடைகளை திறந்து கொள்ள மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, தமிழகத்தில் ஆயிரத்து 700 மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அப்போது மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, தமிழக அரசு சாலைகளை வகை மாற்றம் செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்த விசாரணையில், தமிழக அரசு தாமாக முன்வந்து உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் பெற்று வருவதாக தெரிவித்தது.
இதைதொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் சில விளக்கங்கள் பெறப்பட்டன.
இந்த நிலையில், இன்று வேறு சில வழக்குகளை விசாரிக்கத் தொடங்கிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, தமிழக அரசு வழக்கறிஞரை திடீரென அழைத்து சாலைகளை வகைமாற்றம் செய்து மதுக்கடைகளை திறப்பது பற்றி உயர்நீதிமன்றம் தான் விளக்கம் பெற்றுவருமாறு கூறியதாக, உச்சநீதிமன்றத்தில் கூறியது ஏன் என கேள்வி எழுப்பினர்.
தாங்கள் ஒருபோதும் அதுபோன்று விளக்கம் பெற்று வர வேண்டும் என தெரிவிக்காதபோது, உயர்நீதிமன்றத்தை மேற்கோள் காட்டி உச்சநீதிமன்றத்தில் எப்படி கூறினீர்கள் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்த நிகழ்வு, தமிழக அரசின் பொறுப்பற்றதன்மையை காட்டுவதாக உள்ளது என்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கண்டனம் தெரிவித்துள்ளது.