பெண் குழந்தைகளுக்கு தூக்குப் போட்டுவிட்டு தாயும் தற்கொலை முயற்சி; அக்கம்பக்கத்தினர் விரைந்து மீட்டும் ஒரு குழந்தை இறப்பு...
திருவாரூர்
திருவாரூரில் இரட்டை பெண் குழந்தைகளுடன் தாய் தூக்குப்போட்டுத் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். குழந்தைகளின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மீட்டும் ஒரு குழந்தை பரிதாபமாக இறந்துவிட்டது.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ளது ஆலத்தம்பாடி, இளவரசன்நல்லூர். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன் (40). இவர் ஆலத்தம்பாடி கடைத்தெருவில் பெட்டிக்கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார்.
இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி மாரியம்மாள் (35). இவர் ஆலத்தம்பாடி கடைத் தெருவில் தையல் கடை நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் முதல் மகன் ஆகாஷ் 10ஆஅம் வகுப்பு படித்து வருகிறார். இரண்டாவது மகன் அபினேஷ் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
அறிவழகனின் இரண்டாவது மனைவி தேவி. இவருக்கு திர்சிகா (3), திரிசினா (3) என்ற இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று திடீரென வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தேவி, தனது இரண்டு குழந்தைகளையும் தூக்கில் தொங்கவிட்டு, தானும் தூக்குப்போட்டுத் தற்கொலைச் செய்ய முயற்சித்துள்ளார்.
குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்து மூன்று பேரையும் மீட்டனர். ஆனால், இதில் நிகழ்விடத்திலேயே திர்சிகா பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர், தேவி மற்றும் மற்றொரு குழந்தை திரிசினாவை திருவாருர் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு 108 அவசர ஊர்தி மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு தேவி, திரிசினா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பின்னர் இதுகுறித்து ஆலிவலம் காவலாளர்களுக்கு தகவல் கொடுத்ததையடுத்து தற்கொலைக்கு காரணம் குடும்ப பிரச்சனையா? அல்லது வேறு எதாவது காரணம் இருக்கிறதா? என்று தங்களது முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.