“சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்க ராட்சத இயந்திரம் தயார்…!!!” - தீப்பொறி காற்றில் பரவுவதால் அகற்றும் பணியில் தாமதம்
சென்னை தி.நகரில் அமைந்துள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையில், நேற்று முன்தினம் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அந்த கட்டிடம் முழுவதுமாக எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக, அங்கு தங்கியிருந்த ஊழியர்கள் உயிர் தப்பினர்.
200க்கு மேற்பட்ட லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து, தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை அணைத்தனர். ஆனால், தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால், வீரர்கள் கடும் சிரமம் அடைந்தனர். மேலும், புதிதாக தீயணைக்கும் கருவி வர வழைக்கப்பட்டது. ஆனால், அதைனை இயக்கக தெரியாமல், தீயணைப்பு வீரர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
சுமார் 36 மணி நேரத்துக்கு மேலாக எரிந்த தீயால், நேற்று அதிகாலை 3 மணியளவில் 2 முதல் 7வது மாடி வரை அனைத்து தளங்களும் இடிந்து விழுந்தன.
இந்த தீ விபத்தால், தி.நகர் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யாரும் அவ்வழியாக செல்ல முடியாதபடி போலீசார் தடுப்பு அமைத்துள்ளனர். இதனால், அந்த பகுதி தீவு போல் காட்சியளிக்கிறது.
இந்நிலையில் மீதமுள்ள கட்டிடத்தை இடிக்க அரசு முடிவு செய்தது. இதையொட்டி jaw cutter எனப்படும் ராட்சத இயந்திரத்தை அங்கு கொண்டு வந்துள்ளனர். இந்த பணி இன்று அதிகாலையில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த புதிய இயந்திரத்தின் மூலம் தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடை கட்டிடம் தகர்க்கப்பட இருக்கிறது. இந்த கருவியை பயன்படுத்தி பகுதி பகுதியாக கட்டிடம் வெட்டி எடுக்கப்பட உள்ளது. அருகில் உள்ள கட்டிடங்களில் வசிக்கும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்டிடத்தை இடிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
ஆனால், அங்கு தீப்பொறிகள் காற்றில் பரவி வருவதால், மீண்டும் தீப்பற்றி எரிகிறது. இதனால், கட்டிடத்தை இடிக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், இந்த இயந்திரத்தின் மூலம் இடிப்பதால், எந்த பாதிப்பம் இருக்காது என சென்னை மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் கூறியுள்ளார்.