போலீஸ் வாகனம் மீது மோதியதில் காரில் வந்தவர் இறப்பு; உடன் வந்தவர் உள்பட போலீஸ் இருவருக்கு பலத்த காயம்...
கிருஷ்ணகிரி
பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்த கார், கிருஷ்ணகிரியில் போலீஸ் வாகனத்தின் மீது மோதியதில் காரில் வந்தவர் உயிரிழந்தார். காரில் உடன் வந்தவர் மற்றும் காவலர் இருவர் பலத்த காயத்தோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த பேரண்டப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் கார் ஷோரூம் எதிரே, கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், மினி லாரி ஒன்று நின்றுக் கொண்டிருந்தது. இதை அந்த வழியாகச் சென்ற தேசிய நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு காவலாளர்கள் பார்த்து, வாகனத்தை எடுக்குமாறு ஓட்டுநரிடம் சொல்லிக் கொண்டிருந்தனர்.
அப்போது, பெங்களூருவில் இருந்து, சென்னை நோக்கிச் சென்ற கார், காவலரின் வாகனம் மீது வேகமாக மோதியது. இதையடுத்து காவல் வாகனம், முன்னால் நின்றுக் கொண்டிருந்த சரக்கு வேன் மீது மோதியது.
இந்த விபத்தில், காரில் வந்த, சென்னை கோடம்பாக்கம் சி.ஆர்.பி. கார்டன் சின்னப் பிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்த, சென்னை மாநகராட்சி வாகன ஓட்டுநர் இளங்கோ என்கிற வேணுகோபால் (46) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது அண்ணன் பலராமன் (60), காவல் வாகன காவல் உதவிஆய்வாளர் சீனிவாசன், காவலர் துரைசாமி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து, அட்கோ காவலாளர்கள் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அதேபோன்று திண்டுக்கல் மாவட்டம், தென்னம்பட்டியைச் சேர்ந்த முனியப்பன் (24), கடலூர் தெற்கு தெருவைச் சேர்ந்த செல்வம் (24), ராஜ்குமார் (24) ஆகியோர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்குச் சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் ஒசூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இருசக்கர வாகனத்தை ராஜ்குமார் ஓட்டிச் சென்றார். சூளகிரியை அடுத்த கோபசந்திரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தபோது, சாலையோரம் இருந்த பலகை மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த முனியப்பன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
செல்வம், ராஜ்குமார் பலத்த காயத்தோடு ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து சூளகிரி காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.