6 பேருக்கு உயிர் கொடுத்த பிரசவத்தில் பலியான கர்ப்பிணி... அனைவரையும் நெகிழ வைத்த சுமை தூக்கும் தொழிலாளி குடும்பத்தினர்!
திருச்சி சுமை தூக்கும் தொழிலாளியின் மனைவி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்து இறந்த நிலையில் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானம் செய்யப்பட்டது இந்த இந்த செயல் அந்த பகுதியினர் நெகிழ்ந்து வருகின்றனர்.
திருச்சி தென்னூரை சேர்ந்தவர் அய்யப்பன். சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி. இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது. 8 மாத கர்ப்பிணியாக இருந்த தனலட்சுமி கடந்த 7-ந் தேதி உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு தொடர் வலிப்புடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உடனடியாக அவருக்கு சி.டி. ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு மூளையில் அதிகப்படியான ரத்தக்கசிவு ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதனால் பிறக்கும் குழந்தைக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதி தனலட்சுமிக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது.
தொடர்ந்து மேல் சிகிச்சை அளித்து வந்த நிலையில் தனலட்சுமி மூளைச்சாவு அடைந்தார். இதனை அடுத்து தனலக்ஷ்மியின் மரணத்தை உறுதி செய்த டாக்டர்கள். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்தால் அதன் மூலம் பலருக்கு வாழ்வு கிடைக்கும் என அவரது குடும்பத்தினரிடம் சொன்னதால். இதற்கு அவரது குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து அரசு மருத்துவமனை டீன் அனிதா மேற்பார்வையில், தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கருணாகரன் தலைமையில் அறுவை சிகிச்சைக் குழு உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். தனலட்சுமியின் உடலில் இருந்து இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் , 2 கண்கள் ஆகிய உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
இதில் இதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு திருச்சியில் இருந்து விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. கல்லீரல் திருச்சி தில்லைநகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கும், சிறுநீரகங்களில் ஒன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவனைக்கும், மற்றொன்று நெல்லை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. 2 கண்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் 6 பேர் வாழ்வு பெற்றனர்.
இதுவரை திருச்சியில் உடல் உறுப்புகள் தானம் அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனையில் மட்டுமே நடந்து வந்த நிலையில் இப்போது முதன் முறையாக திருச்சி அரசு மருத்துவமனையில் உடல் உறுப்புதான அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
திருச்சி சுமை தூக்கும் தொழிலாளி அய்யப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆறு பேருக்கு வாழ்வளித்த இந்த இந்த செயல் அந்த பகுதியினர் நெகிழ்ந்து வருகின்றனர்.