The bridegroom who stopped marriage
10 சவரன் நகை குறைந்ததால் தலைமறைவான மணமகன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருமணம் நின்று போனதால் மணமகள் வீட்டார் மற்றும் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சம்பவம் திருவள்ளூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, எழும்பூரைச் சேர்ந்தவர் பிரபாகர். இவருடைய மகன் சரண்குமார் (25). இன்ஜினியரான இவர், சென்னையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
சரண்குமாருக்கும், திருவள்ளூரை அடுத்த மணவாள நகரை சேர்ந்த ஜானகிராமனின் மகளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது., மணமகன் வீட்டார், 50 சவரன் நகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வரதட்சணையாக கேட்டுள்ளனர். மணமகனின் குடும்பத்தார் கேட்டவைகளை, மணமகள் வீட்டில் அளிக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இவர்களது திருமணம், திருவள்ளூரை அடுத்த மணவாள நகர் ஒண்டிக்குப்பத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நேற்று காலை நடைபெற இருந்தது.
முன்னதாக நடைபெற்ற திருமண வரவேற்பு களை கட்டி இருந்தது. வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், அனைவரும் தூங்க சென்றனர். ஆனால், நேற்று அதிகாலை திருமண ஏற்பாடு நடைபெற்றது. திருமணத்துக்கு மணமகள் தயாராகிக் கொண்டிருந்தார். மணமகனையும் தயார் படுத்த நினைத்த உறவினர்கள், சரண்குமார் காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மணமகனை எங்கு தேடியும் காணாததை கண்ட மணமகள் வீட்டார் கதறி அழுதனனர். திருமண நேரத்தில் மணமகன் ஓட்டம் பிடித்தது குறித்து மணமகன் வீட்டார் போலீசில் புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
மணமகள் வீட்டாரிடம் கேட்ட 50 சவரன் நகையில் 10 சவரன் நகையை பிறகு தருவதாக, மணமகன் வீட்டாரிடம் ஜானகிராமன் கூறியதாக தெரிகிறது. இதனால், மணமகன் சரண்குமார் தப்பியோடியதாக கூறப்படுகிறது.
தலைமறைவான மணமகன் சரண்குமாருக்கு, கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று மணமக்களும், அவர்களின் உறவினர்களும் போசீரிடம் கேட்டுக் கொண்டனர்.
