காவிரிக்காக களமிறங்கிய ஆசிரியர்கள்; பல்வேறு இடங்களில் ஆவேசத்துடன் ஆர்ப்பாட்டம்...
புதுக்கோட்டை
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவர்கள், மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனொரு பகுதியாக புதுக்கோட்டையில் நேற்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
அதேபோன்று, பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் ராஜகோபாலன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமன், மாவட்ட துணை செயலாளர் புவியரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதேபோன்று, ஆவுடையார்கோவில் தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தை சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் குணசேகரன் தொடங்கிவைத்தார். இதில் வட்டாரத்தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
இதேபோல கந்தர்வகோட்டை தொடக்க கல்வி அலுவலகம் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் செல்லச்சாமி தலைமை தாங்கினார். இதில் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ் மற்றும் பலர் பங்கேற்றனர்.
இதேபோன்று மணமேல்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைமை அல்போன்ஸ் தலைமை தாங்கினார். இதில் வட்டார செயலாளர் தேவராஜி, மாவட்ட துணைத்தலைவர் இளையராஜா மற்றும் பலர் பங்கேற்றனர்.
அதேபோல விராலிமலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் ஜான்மரிய ஜோசப் தலைமை தாங்கினார். இதில் வட்டார செயலாளர் ஜான் சௌந்தரராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.