Sunday lockdown in Tamilnadu:நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது.. இன்று அலைமோதும் கூட்டம்..
தமிழ்நாட்டில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜனவரி 23ஆம் தேதியான வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு நேற்று அறிவித்தது. கடந்த 2 ஞாயிற்றுக்கிழமைகளும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், நாளையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.இந்தநிலையில், தமிழ்நாட்டில் (டிசம்பர் 23) நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துவருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கிறது. இந்நிலையில் கொரோளா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கபட்டுள்ளன. அந்த வகையில், கடந்த 2 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கபட்டு வந்த நிலையில் நாளையும் 23.01.2022 முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.
இந்த முழு ஊரடங்கு நாளில் கடந்த 16-1-2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைமுறைப் படுத்தப்பட்ட அதே அந்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும். தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளியூர்களிலிருந்து வரும் பயணிகளின் நலன் கருதி, சென்னை சென்ட்ரல், எழும்பூர் இரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள், செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும் வாடகை கார்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட இரயில் நிலையங்களுக்கும் மற்றும் வெளியூர் பேருந்து நிலையங்களுக்கும் இது பொருந்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.இந்நிலையில் நாளை ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் நாளை மட்டும் அரசு பேருந்துகள் இயங்காத நிலையில், நாளை ஒருநாள் ஆம்னி பேருந்துகளும் இயங்காது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் வழக்கம் போல் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில்,பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவை இருக்காது. கேளிக்கை சார்ந்த அனைத்து செயல்பாடுகளுக்கும் முற்றிலுமாக தடை விதிக்கப்படும். மொபைல் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற கடைகள் அனைத்துக்கும் முழு தடை விதிக்கப்பட்டுள்ளது.அதேபோல வழிபாட்டுத்தலங்களுக்கு அனுமதியில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே தமிழ்நாட்டில் (டிசம்பர் 23) நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.