சென்னை ஐஐடியில் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம், மற்றும் தேசிய கீதத்துடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலையும் இசைக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

சென்னை ஐஐடியில் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம், மற்றும் தேசிய கீதத்துடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலையும் இசைக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி 58வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்தாய் வாழ்த்து புறக்கணிப்பட்டது. இது பெரும் சர்ச்சையானது. இதை அடுத்து உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி ஐஐடி நிறுவனத்தின் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்திக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், தமிழ்நாடு அரசு தான் 1959 ஆம் ஆண்டு ஐஐடி நிர்வாகத்திற்கு கல்லூரி அமைப்பதற்கு 250 ஹெக்டேர் இடம் வழங்கியது. அது முதல் ஐஐடிக்கு பல்வேறு உதவிகள், சலுகைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து செய்து வந்துள்ளது. ஐஐடியில் அமையவுள்ள கிரையோ எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் அமைக்க ரூ.10 கோடி நிதியுதவி கேட்டு, உயர்கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு ஐஐடி நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது.

இது தொடர்பாக பரீசிலனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐஐடி பட்டமளிப்பு விழாவில் தமிழ்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது ஏமாற்றமடைய செய்துள்ளது. தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்து மத்திய அரசு, மாநில அரசு நிகழ்ச்சிகளிலும், பிரதமர், குடியரசு தலைவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளிலும் கூட தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது நீண்டநாள் மரபாக இருக்கும் போது, ஐஐடியில் நடைபெறும் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து வருங்காலத்தில் இடம்பெறுவதை கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சென்னை ஐஐடி தனது அதிகார பூர்வ நிகழ்ச்சிகளில் வந்தேமாதரம், மற்றும் தேசிய கீதத்துடன் கூடுதலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை சேர்க்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சென்னை ஐஐடியில் வந்தே மாதரம், மற்றும் தேசிய கீதத்துடன் கூடுதலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலையும் இசைக்கலாம் என்று மத்திய கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பான தகவல் விரைவில் சென்னை ஐஐடிக்கு அனுப்பப்பட இருப்பதாக மத்திய கல்வித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாநில கீதமாக பிரகடனம் செய்த தமிழ்நாடு அரசு, அனைத்து விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.