TN Transport Workers' Diwali Bonus: தமிழக போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

நாடு முழுவதும் வரும் 20ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாட‌ப்படுகிறது. தீபாவளியையொட்டி மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக போக்குவரத்து கழக ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனஸ் தொகை ஊழியர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழக போக்குவரத்துக் கழகம்

இது குறித்து சிவசங்கர் வெளியிட்ட அறிக்கையில், 'தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் பொதுமக்களின் போக்குவரத்துத் தேவையை பெருமளவு பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றி வருகின்றன. எட்டு அரசு போக்குவரத்து கழகங்களின் 20,912 பேருந்துகள், 10,125 க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் மூலம் குக்கிராமம் முதல் மாநகரங்கள், உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்குதடையின்றி. போக்குவரத்து சேவை வழங்குவதன் மூலம் தினசரி 1.97 கோடி மக்கள் பயணிக்கின்றனர்.

பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்கு

இதில் 60 சதவீத பயணிகள் கட்டணமில்லா அல்லது சலுகை கட்டணத்தில் பயணிக்கின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் பங்களிப்பு இன்றியமையததாகும். இதனால் தமிழ்நாட்டின் பேருந்து வலையமைப்பு ஒரு முக்கியமான சமூக பாதுகாப்பு வலையமைப்பாக விளங்குகிறது.

போக்குவரத்து ஊழியர்களுக்கு போனஸ்

இந்த நிலையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவுப்படி, போக்குவரத்து தொழிலாளர்களின் உழைப்பை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 1,05,955 பணியாளர்களுக்கு 2024-2025 ஆம் ஆண்டிற்காக வழங்கப்படும் மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை 175 கோடியே 51 லட்சம் ரூபாய் அவர்களின் வங்கி கணக்கில் இன்று (15.10.2025), வழங்கப்பட்டுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.