நீட் விஷயத்தில் ஏமாற்றிய தமிழக அரசு ஒட்டுமொத்தமாக பதவி விலக வேண்டும் – மாணவர்கள் போராட்டம்…
தஞ்சாவூர்
நீட் தேர்வில் விலக்கு பெற்றுத் தருவோம் என்று கூறி ஏமாற்றிய தலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு பதவி விலக வேண்டும் என்று மாணவர்கள் – இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவப் படிப்பிற்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றதால் பிளஸ்–2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும், ஏராளமான மாணவ, மாணவிகள் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் மனஉளைச்சல் அடைந்துள்ளனர்.
அப்படி மன உளைச்சலில் இருந்த அரியலூர் மாவட்டம் குழுமூர் காலனி தெருவைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இந்தத் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என்று பல்வேறு கட்சிகள், மாணவர்கள் அமைப்பினர், மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தஞ்சை கரந்தை வடவாறுபாலம் அருகே தமிழ்நாடு மாணவர் இயக்கம், தமிழ்நாடு இளைஞர் இயக்கம் ஆகியவை சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்திற்கு மாணவர் இயக்க மாநிலச் செயலாளர் பிரபாகரன், இளைஞர் இயக்க மாநிலத் தலைவர் அருண்சோரி ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில் பங்கேற்ற மாணவர்கள், இளைஞர்கள் கையில் அனிதா உருவப்படத்தை ஏந்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
“நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவோம் எனக் கூறி கடைசி நேரத்தில் மாணவர்களை ஏமாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு பதவி விலக வேண்டும்.
மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்தப் போராட்டத்தில் மாணவர்கள் வலியுறுத்தினர்.
இதனை அறிந்த கிழக்கு காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் மறியலை கைவிட மறுத்ததுடன், சாலையில் படுத்துக் கொண்டு போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
உடனே கூடுதல் காவலாளர்கள் வரவழைக்கப்பட்டு, சாலையில் படுத்திருந்த மாணவர்கள், இளைஞர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். இதுபோன்று மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.