இந்திய குடிமைப் பணித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ரூ.7,5000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Tamil Nadu Goverment Incentive of Rs.7,5000 For Students Preparing For UPSC: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினால் 07.03.2023 அன்று துவங்கி வைக்கப்பட்டது. அப்பிரிவானது தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒன்றிய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்

இந்நிலையில் 2023-24 க்கான தமிழ் நாடு அரசின் பட்ஜெட் உரையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC), அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்துடன் இணைந்து, ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காக பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளைச்செய்து உதவும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது.

ரூ.7,500 ஊக்கத்தொகை

இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் 1,000 சிவில் சர்வீசஸ் பயின்று வரும் மாணவர்கள், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படும். இத்திட்டம் கடந்த 2023- ஆம் ஆண்டு முதல் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2024 மற்றும் 2025 -ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற யு.பி.எஸ்.சி முதல் நிலைத் தேர்வுகளில் முறையே 276 மற்றும் 315 நான் முதல்வன் ஊக்கத் தொகை பயனாளி மாணவர்கள் முதன்மைத் எழுதத் தேர்வு செய்யப் பட்டனர்.

மதிப்பீட்டுத் தேர்வு எழுத வேண்டும்

இத்திட்டத்தின் படி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், அதன் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக யு.பி.எஸ்.சி முதல் நிலைத் தேர்வு‍ 2026-க்கு தயாராகும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான மதிப்பீட்டுத் தேர்வை 26.07.2025 அன்று நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 1000 தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் 7500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும்.

சேர்க்கை எப்படி நடைபெறும்?

கடந்த ஆண்டைப் போலவே, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் கீழ் இயங்கி வரும் அகில இந்திய குடிமை பணிகள் பயிற்சி மையங்களுக்கான (ஆர்.ஏ புரம் சென்னை, பாரதியார் பல்கலைக்கழகம் கோவை மற்றும் காமராஜர் பல்கலைக்கழகம் மதுரை) சேர்க்கை மதிப்பீடுத் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

மேற்படி பயிற்சி மையங்களைத் தேர்வு செய்வதற்கான விருப்பம் கோரும் விண்ணப்பம் பின்னர் தனியாக வெளியிடப்படும். இந்த மதிப்பீட்டுத் தேர்வை எழுதி ஊக்கத்தொகை மற்றும் அகில இந்திய குடிமை பணிகள் பயிற்சி மையங்களுக்கான சேர்க்கை பெற விரும்பும் ஆர்வமுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள், https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விரிவான அறிவிக்கையைப் படித்து பார்த்து, இன்று (26.06.2025) முதல் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு எப்போது நடைபெறும்?

விண்ணப்பித்தை சமர்ப்பிக்க கடைசி தேதி 10.07.2025 ஆகும். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 10.07.2025 ஆகும்.நுழைவுச் சீட்டு ஜூலை 3வது வாரம் வெளியிடப்படும். தகுதியானவர்களுக்கு 26.07.2025 அன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை தேர்வு நடைபெறும்.