சாராயக் கடைகளுக்கு எதிராக போராடும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கனும்; நீதிமன்றத்தில் வழக்கு…
மதுரை
சாராயக் கடைகளுக்கு எதிராக போராடும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெ ன்று மதுரை உயர்நீதி மன்றத்தில் கோரிக்கை மனு ஒன்று போடப்பட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை உயர்நீமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “டாஸ்மாக் சாராயக் கடைகளால் ஆண்டுதோறும் 30 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது.
இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள சாராயக் கடைகளை அகற்ற வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன்படி தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களிலுள்ள டாஸ்மாக் சாராயக் கடைகளை அகற்றி, வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்படுகின்றன.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திருச்சி, கோவை, வேலூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெண்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
பல இடங்களில் இடமாற்றம் செய்யப்பட்ட டாஸ்மாக் சாராயக் கடைகளை அடித்து நொறுக்கி, சாராய பாட்டில்களை சாலையில் உடைத்து சேதப்படுத்தி வருகின்றனர். இதனால் அரசின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், பொது சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதுபோன்ற போராட்டங்களில் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. எனவே பொதுச் சொத்துக்களை பாதுகாக்கும் வகையில் டாஸ்மாக் சாராயக் கடைகளுக்கு எதிராக போராடும் பெண்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த மாதம் 3–ஆம் தேதி அரசு அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினேன்.
ஆனால், எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. எனவே எனது மனுவை பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மதுரை உயர்நீதிமன்ற திபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின் முடிவில் இந்த மனு குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி. டாஸ்மாக் சாராயக் கடைத் தலைவர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டது. மேலும், இந்த விசாரணையை ஜூலை மாதம் 3–ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.