sub inspector suicide in chennai
சென்னை, கொளத்தூரில், மத்திய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன், இன்று அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவர் ராமகிருஷ்ணன். இவருக்கு வயது 56. ராமகிருஷ்ணன் நீண்டகாலமாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக ராமகிருஷ்ணன் மருத்துவம் பார்த்து வந்திருந்தார்.
இதனால், கடந்த சில நாட்களாகவே ராமகிருஷ்ணன் அலுவலகத்தில் விடுமுறை கூறிவிட்டு தொடர் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். தொடர்ந்து மருத்துவம் பார்த்து வந்தாலும், ராமகிருஷ்ணனுக்கு உடல்நிலை சரியாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ராமகிருஷ்ணன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிகிறது.
இந்த நிலையில் ராமகிருஷ்ணன் இன்று காலை சுமார் 4 மணியளவில் வீட்டில் உள்ள ஃபேனில், நைலான் கயிற்றைக் கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதை அறிந்த அவரது உறவினர்கள், காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராமகிருஷ்ணன், தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
