தாய் உயிரிழந்த சோகம்! கண்ணீருடன் 10 ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவன்...!
தாய் உயிரிழந்த சோகத்தை தாண்டி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை மாணவர் ஒருவர் எழுதியுள்ளார். இந்த சம்பவம் கோவையில் நடந்துள்ளது.
பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தற்போது தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டம், கல்வீரம்பாளையத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரி. இவரது மகன் அன்புச்செல்வன், கோவை, கல்வீரம்பாளையம் பகுதியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
தற்போது 10 ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வரும் நிலையில் அன்பு செல்வன், தேர்வெழுதி வருகிறார். இந்த நிலையில் நேற்று திடீரென, வெங்கடேஸ்வரிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.
பொதுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், தாய் உயிரிழந்தது ஒரு புறம் இருந்தாலும், தேர்வை எழுத வேண்டும் என்ற நோக்கத்தில், அன்புச்செல்வன் அழுதபடியே பள்ளிக்கு சென்று ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வை எழுதினார்.
கடந்த வாரம் வெங்கடேஸ்வரி கணவருடன், பைக்கில் சென்றபோது கீழே விழுந்துள்ளார். அந்த விபத்தில் வெங்கடேஸ்வரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வெங்கடேஸ்வரி செவ்வாய்க்கிழமை அன்று வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில்தான் அவருக்கு நேற்று அதிகாலை நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே வெங்கடேஸ்வரி உயிரிழந்துள்ளார்.
ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வை எழுதிய அன்புச்செல்வன், தாயின் உடல் வைக்கப்பட்ட கோவை அரசு மருத்துவமனைக்குச் சென்று உடற்கூறாய்வு முடிந்தவுடன் சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டத்துக்கு கொண்டு சென்றனர்.