கல்லூரி விடுதியில் பி.டெக். மாணவன் தூக்கிட்டு தற்கொலை - ராகிங் கொடுமையா???
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரகாஷ். தனியார் கம்பெனி ஊழியர். இவரது மகன் லோகேஷ்குமார் (18). சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலையில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்தார்.
ஆயுதப்பூஜையை முன்னிட்டு மாணவர்கள், தங்களது சொந்த ஊருக்கு சென்றனர். ஆனால், லோகேஷ்குமார் செல்லாமல் விடுதியிலேயே தங்கி இருந்தார்.
இந்நிலையில் இன்று காலை விடுதி அறையில் தங்கியுள்ள சக மாணவர், ஊரில் இருந்து திரும்பி வந்தார். அப்போது, கதவு உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை. இதையடுத்து விடுதி நிர்வாகிகள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்குள்ள மின்விசிறியில் லோகேஷ்குமார், தூக்குப்போட்டு சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.
லோகேஷ்குமார், காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டரா, கல்லூரியில் மாணவர்கள் ராகிங் செய்ததால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா என தீவிரமாக விசாரிக்கின்றனர்.