ஒரு தலை காதலால் காரில் கடத்தப்பட்ட மாணவி - டோல்கேட்டில் பணம் கட்டும்போது மடக்கி பிடித்த ஊழியர்கள்... சினிமாவை மிஞ்சும் சேசிங் காட்சிகள்
பெரம்பலூர் மாவட்டம் புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரீஷ்மா (19). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று காலை ரீஷ்மா, கல்லூரிக்கு புறப்பட்டார். புதுப்பேட்டை பஸ் நிறுத்தத்தில், பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது, அங்கு ஒரு கார் வேகமாக வந்து நின்றது. கண்ணிமைக்கும் நேரத்தில், காரில் இருந்த சில
வாலிபர்கள், ரீஷ்மாவை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சென்றனர். இதை பார்த்ததும், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அனைத்து பகுதியில் உள்ள சுங்கச்சாவடிகள், சோதனைச்சாவடி போலீசாருக்கு அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும்படி உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், விக்கிரவாண்டி சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த ஒரு காரில் இருந்த டிரைவர், சுங்க பணம் செலுத்துவதற்காக கண்ணாடியை இறக்கினார்.
அந்த நேரத்தில், காரில் இருந்து இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது.
உடனே போலீசார், அந்த காரை சுற்றி வளைத்தனர். அதில் இருந்த வாலிபர்களிடம் விசாரித்தபோது, பெரம்பலூரில் கடத்தப்பட்ட கல்லூரி மாணவி ரீஷ்மா என தெரிந்தது. மாணவியை மீட்ட போலீசார், காரில் இருந்த 4
வாலிபர்களையும் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.
அதில், திட்டக்குடி அருகே பட்டூர் போத்திரமங்கலம் பகுதியை சேர்ந்த விக்னேஷ்வரன் (21), காமராஜ் (23), பிரவின் (21), குமார்(27) என தெரிந்தது. மேலும் விசாரணையில், ரீஷ்மாவின் உறவினர் விக்னேஷ்வரன். அவர்,
ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதுபற்றி பலமுறை ரீஷ்மாவிடம் கூறியும், அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த விக்னேஷ்வரன், தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த மாணவியைக்
கடத்தியது தெரியவந்தது.
இதைதொடர்ந்து போலீசார், 4 பேரையும் கைது செய்து, சம்பவம் நடந்த எல்லையானபெரம்பலூர் மாவட்டம், மங்கலமேடு போலீசாரிடமும், மாணவியை பெற்றோரிடமும் ஒப்படைத்தனர். இச்சம்பவம் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியது.