வேலூர் அருகே 4 ஆம் வகுப்பு பயிலும் மாணவி, விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த தோட்டாளம், உடையராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். கூலி தொழில் செய்து வரும், குடும்ப தகராறில் மனைவி பழனியம்மாளை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில், பழனியம்மாள் தனது மகள் சினேகாவை உடன் அழைத்துக் கொண்டு ஆம்பூர் பகுதியில் உள்ள சங்கராபுரத்தில் தனது தாயுடன் வசித்து வருகிறார். சினேகா, அந்த பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று விடுமுறை என்பதால், தண்ணீர் எடுப்பதற்காக அங்குள்ள விவசாய கிணற்றுக்கு தனது தோழிகளுடன் சென்றுள்ளார்.

தண்ணீர் சேகரித்துக் கொண்டிருந்த நிலையில் சினேகா, 400 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதனை அடுத்து, உடன் வந்தவர்கள் கூக்குரலிட்டுள்ளனர். பின்னர், ஆம்பூர் தீயணைப்பு நிலையத்துக்கும், மேல்பட்டி காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் இரண்டு மணி நேரம் போராடி சினேகாவின் உடலை மீட்டனர்.

சினேகாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மேல்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
