சேலம்,

வெண்ணந்தூர் அருகே காதலிக்குமாறு இளைஞர் தொல்லைக் கொடுத்ததால் 9-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

அந்த மாணவியின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்ததால் சேலம் அரசு மருத்துவமனையில் பதற்றம் நிலவியது.

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே உள்ள தட்சன்காடு பகுதியை சேர்ந்தவர் இராதா (15), (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர் அங்குள்ள பள்ளியில் 9–ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் திங்கள்கிழமை காலை, அம்மாவின் புடைவையால் வீட்டின் மேற்கூரையில் தூக்குப் போட்டு இராதா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

சம்பவம் அறிந்து வந்த வெண்ணந்தூர் காவல்துறையினர், இராதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே இராதாவின் தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், இராசிபுரம் அருகே காரைக்குறிச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் அடிக்கடி போன் செய்து எனது மகளை காதலிக்குமாறு தொல்லைக் கொடுத்தார். அதனால்தான், என் மகள் தற்கொலை செய்து கொண்டாள் என கூறியிருந்தார்.

இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செவ்வாய்க்கிழமை பிரேத பரிசோதனை முடிந்தது. மாணவியின் உடலை அவர்களுடைய உறவினர்களிடம் காவல்துறையினர் வழங்கினர். ஆனால் அவர்கள், உடலை வாங்க மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து மாணவியின் உறவினர்களிடம் பாதுகாப்புக்கு வந்த வெண்ணந்தூர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள், “இராதாவை இளைஞர் ஒருவர் காதலிக்க வற்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவர்மீது எந்தவிதமான நடவடிக்கையும் காவல்துறையினர் எடுக்கவில்லை. எனவே, தற்கொலைக்கு காரணமான இளைஞரைக் கைது செய்த பின்னரே உடலை வாங்குவோம்” என கூறினார்.

இதற்கு காவல்துறையினர், “இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர்களிடம் உறுதியளித்தனர்.

இதில் சமாதானம் அடைந்த அவர்கள் மாணவியின் உடலை பெற்றுக் கொண்டனர்.

இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் பதற்றம் ஏற்பட்டது.