வெகுநேரமாக காத்திருந்தும் ஏலம் நடத்தாததால் கடுப்பான வியாபாரிகள்; 100-க்கும் மேற்பட்டோர் போராட்டம்....
நாமக்கல்
சீமைக் கருவேல மரங்களை வெட்டுவது தொடர்பான ஏலத்தை வெகுநேரமாக காத்திருந்தும் நடத்தாததால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், வள்ளிபுரம் மற்றும் வீசாணம் ஏரியில் உள்ள சீமைக் கருவேல மரங்களை வெட்ட ஏலம் நடப்பதாக நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனையடுத்து சேலம், கோவை, திருப்பூர், திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொள்ள நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.
ஆனால், மாலை 4 மணி வரை ஏலம் நடத்த எந்த முன் ஏற்பாடும் செய்யப்படாததைக் கண்டித்து 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் சமரசம் செய்ததையடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், வேறொரு தேதியில் ஏலம் நடத்தப்படும் என்றுத் தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட வியாபாரிகள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த சம்பவத்தால் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.