ஆசிரியர்களின் கண்டிப்புக்கு பணிய மறுப்பவர்களை நாளை காவல்துறைதான் கண்டிக்கும் - ஐபிஎஸ் அதிகாரி அட்வைஸ்…
திண்டுக்கல்
ஆசிரியர்களின் கண்டிப்புக்கு பணிய மறுப்பவர்கள், நாளை காவல்துறையின் கண்டிப்புக்கு ஆளாக வேண்டிய சூழல் உருவாகும் என்று அரசு பள்ளியில் படித்து ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வுச் செய்யப்பட்ட ஆர்.ஆனந்த் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி நாசுவிவி அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இதில், இப்பள்ளியில் பயின்று ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்வுச் செய்யப்பட்ட ஆர்.ஆனந்த் என்பவருக்கு பாராட்டு விழா நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு, பள்ளியின் மேலாண்மை குழுத் தலைவர் ராஜாராம் தலைமை தாங்கினார். ஆலோசனைக் குழுத் தலைவர் மோகன் அருணாச்சலம் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து, ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு பெற்று, ஐதராபாதில் பயிற்சி பெற்று வரும் ஆனந்த் பேசியது:
“ஆசிரியர்கள் கண்டிப்பதை மாணவர்கள் எதிர்மறையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இன்று
ஆசிரியர்களின் கண்டிப்புக்கு பணிய மறுப்பவர்கள், நாளை காவல்துறையின் கண்டிப்புக்கு ஆளாக வேண்டிய சூழல் உருவாகும்.
அறிந்த மற்றும் புரிந்த மொழியில் கற்பதால், கல்வி மீது மாணவர்களுக்கு ஈர்ப்பு ஏற்படும்” என்று பேசி அனைவரின் கைத்தட்டல்களையும் பெற்றார்.