stop printing gandhi ji picture in rupee notes petition rejected by high court
ரூபா நோட்டுல சிரிக்கிறாரு காந்தி.. என ஒரு சினிமாப் பாடலும் உண்டு. பொய்க்கணக்கை காந்தி கணக்கு என்று கலாய்ப்பவர்களும் உண்டு. ஆனால், இவற்றால் எல்லாம் காந்திக்கு களங்க என்று ஒருவர் கொதித்தெழுந்திருக்கிறார். இந்தியாவின் ரூபாய் நோட்டுகளில் தேசப் பிதா மகாத்மா காந்தியை அச்சிடக் கூடாது என்று வழக்கு போட்டவருக்கு உயர் நீதிமன்றம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்தது.
முருகானந்தம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், காந்தியின் படத்தை ரூபாய் நோட்டுகளில் அச்சிடக்கூடாது., நாட்டில் கள்ள நோட்டுகளும் அச்சிடப்படுகின்றன. மேலும், கள்ள நோட்டுகளிலும் ரூபாய் நோட்டுகளிலும் பலரும் எதையாவது எழுதி கிறுக்குகிறார்கள். இதனால், தேசப்பிதா மகாத்மா காந்தியின் புகழுக்கு களங்கம் ஏற்படுகிறது.
எனவே காந்தியின் புகழைக் கருத்தில் கொண்டும், காந்தியின் புகழுக்கு களங்கம் ஏற்படாமல் தடுக்கவும், ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படத்தை அச்சிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், அரசியல் சட்டப்படி தீவிர ஆலோசனைக்குப் பிறகே ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படம் அச்சிடப்படுகிறது. எனவே, இதுபோன்ற மனுக்களைத் தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்காதீர்கள்... என்று கூறி இதற்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், இவ்வாறு ஒரு மனுவை தாக்கல் செய்த நபருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
