Stealth booze vendor should be arrested immediately people demonstrating

கடலூர்

கடலூரில் நெடுஞ்சாலை அருகே திருட்டுத்தனமாக டாஸ்மாக சாராய பாட்டில்களை விற்பவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தொண்டங்குறிச்சி பேருந்து நிறுத்தம் இருக்கிறது. இதன் அருகே டாஸ்மாக் சாராயக் கடை அமைக்கப்பட்டு இருந்தது. உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவினால் இந்த சாராயக் கடை அகற்றப்பட்டது.

இந்நிலையில் தற்போது அந்தப் பகுதியில் சிலர் திருட்டுத்தனமாக சாராய பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்கின்றனர் என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் வேப்பூர் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர். ஆனால், காவலாளர்கள் அந்த புகாருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த கிராம மக்கள், நேற்று காலை தொண்டங்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே திரண்டனர்.

பின்னர், அவர்கள், சாராய பாட்டில்களை விற்பனை செய்பவர்களை கைது செய்ய கோரி, கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், அவர்கள் திருச்சி –சென்னை தேசிய நெடுஞ்சாலையை மறித்து சாலை மறியல் செய்யவும் முயன்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த வேப்பூர் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, “சாராய பாட்டில்கள் திருட்டுத் தனமாக விற்பனை செய்பவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று காவலாளர்கள் உறுதியளித்தனர். இதனை ஏற்று கிராம மக்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்தனர்.

இந்தச் சம்பவத்தால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.