Sri Lanka Navy arrested Indian jail to stir the fish at night
கடலூர் முதுநகர்
இராமேசுவரம் மீனவர் பிரிட்ஜோவை சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படை வீரர்களை கைது செய்து, இந்திய சிறையில் அடைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் முதுநகரில் இரயில் மறியல் செய்ய முயன்ற 50 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
இராமேசுவரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ, இலங்கை கடற்படையினரால் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும், மீனவர்கள் மத்தியில் கோவத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
இதனைக் கண்டித்து இராமேசுவரத்தில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதுதவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மீனவர்கள் அமைப்பினர், பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர் முதுநகர் இரயில் நிலையம் முன்பு மீனவர் விடுதலை வேங்கைகள் இயக்கத்தை சேர்ந்தவர்களும், மீனவர்களும் நேற்று ஒன்று திரண்டனர்.
இவர்களுக்கு மீனவர் விடுதலை வேங்கைகள் நிறுவனர் மங்கையர்செல்வன் தலைமைத் தாங்கினார்.
“பிரிட்ஜோவை சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படை வீரர்களை கைது செய்து, இந்திய சிறையில் அடைக்க வேண்டும்,
இந்தியாவில் உள்ள இலங்கை தூதர்களை இலங்கைக்கு உடனே திருப்பி அனுப்ப வேண்டும்,
இலங்கை அரசுடன் உள்ள அனைத்து அரசியல் உறவுகளையும் உடனே முறித்துக் கொள்ள வேண்டும்,
இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கையில் சிறைபடுத்தப்பட்டு உள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் அனைத்தையும் உடனே விடுவிக்க வேண்டும்”
என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு இரயிலை மறிக்க இரயில் நிலையம் நோக்கிப் புறப்பட்டனர்.
அப்போது, அவர்களை கடலூர் முதுநகர் காவலாளர்கள் இரயில் நிலையம் முன்பே தடுத்தி நிறுத்தினர். அப்போது, காவலாளர்களுக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இரயில் மறியல் செய்ய முயன்றதாக கூறி மங்கையர்செல்வன் உள்பட 50 பேரை காவலாளர்கள் கைது செய்தனர். அவர்களை காவல் வேனில் ஏற்றிச் சென்று தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர், மாலையில் விடுவித்தனர்.
