திருப்பூரில் இன்று அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்...
திருப்பூர்
திருப்பூரில் இன்று அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள உள்விளையாட்டரங்கில், "தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்" சார்பில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்கி நடைபெற உள்ளன.
மாநில அளவிலான போட்டிக்கு வீரர்களைத் தேர்வு செய்யும் வகையில் இந்த போட்டி நடத்தப்படுகிறது. இதில், ஆடவர், மகளிர் என இரண்டு பிரிவுகளில் மேஜைப்பந்து, கபடி போட்டிகள் தனித் தனியாக நடத்தப்படவுள்ளன.
அரசுத் துறை அலுவலகங்களில் பணி செய்யும் ஊழியர்கள் இதில் கலந்து கொள்வர். காவல்துறை, தீயணைப்புத் துறையினர் கலந்து கொள்ள முடியாது. அரசுப் பணியில் சேர்ந்து ஆறு மாதங்களுக்கு உள்பட்டவர்கள் இதில் சேர முடியாது. ஒப்பந்த பணியாளர்கள், தினக் கூலி பணியாளர்கள் கலந்து கொள்ள முடியாது.
கலந்து கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கலந்து கொள்ள விரும்புவோர் துறை அலுவலகத் தலைவரிடம் உரிய அனுமதியுடன் கடிதம் பெற்று பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.