முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், அவருக்கு தனி வார்டுக்கான அறை தயாராகி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி, முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தொடர்ந்து உள்ள அவருக்கு அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் குழு, லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, சிங்கப்பூரை பிசியோதெரபிஸ்ட் பெண் நிபுணர்கள், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் ஆகியோரின் சிறப்பான சிகிச்சையால், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து வருகிறது.

தற்போது முதலமைச்சர் ஜெயலலிதா, ஒரு நாளைக்கு 20 மணி நேரத்துக்கு மேலாக செயற்கை சுவாசம் இல்லாமல் இயல்பாக மூச்சு விடுவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். காலை முதல் நள்ளிரவு வரை அவர் நன்றாக மூச்சுவிடுகிறார் என்றும், அவரது உடல்நிலை முன்னேற தொடங்கி உள்ளதாகவும் கூறுகின்றனர். ஆனால், தூங்கும் நேரத்தில் மட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது.

ஜெயலலிதாவின் உடல்நிலையில் ஏற்பட்டு வரும் வேகமான முன்னேற்றத்தை கண்டு டாக்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனவே அவருக்கு செயற்கை சுவாசத்தை முழுமையாக அகற்றுவது குறித்து டாக்டர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

மேலும், ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, இந்த வார இறுதியில் அவரை, தனி வார்டுக்கு மாற்றலாம் என அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்காக தனி அறையும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.