தந்தையின் உடலை வீட்டுக்கு எடுத்துசென்றபோது விபத்தில் சிக்கிய மகன்; பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதி..
சிவகங்கை
சிவகங்கையில் நோய்வாய்ப்பட்டு இறந்த தந்தையின் உடலை வீட்டுக்கு எடுத்துசென்றபோது விபத்தில் சிக்கிய மகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள வையாபுரிபட்டியைச் சேர்ந்தவர் சிவா (25). இவரது தந்தை செல்வம், சிறுநீரக பாதிப்பு காரணமாக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் அவர், உயிரிழந்ததைத் தொடர்ந்து, சிவா தனது தந்தையின் உடலை அவசர ஊர்தியில் ஏற்றிவிட்டு பின்னால் இருசக்கர வாகனத்தில் ஊருக்கு வந்துக் கொண்டிருந்தார்.
திருக்கோஷ்டியூர் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையின் குறுக்கே இருந்த பேரிக்கார்ட்டில் மோதி சிவா பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து திருக்கோஷ்டியூர் காவலாளர்கள் வழக்குப்பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.