six year old boy died of fever Relatives fight for wrong treatment

திருப்பூர்

திருப்பூரில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த சிறுவன் இறந்ததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையின் தவறான சிகிச்சையே காரணம் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம், வீரபாண்டி கிருஷ்ணாநகரைச் சேர்ந்த பனியன் நிறுவன தொழிலாளி சதாசிவம் (32). இவருடைய மனைவி பவித்ரா. இவர்களுடைய மகன் ரித்திஷ் (6).

அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்த ரித்திசுக்கு காய்ச்சல் ஏற்பட்டு கடந்த வாரம் அவனுடைய பெற்றோர், திருப்பூர் – தாராபுரம் சாலை பலவஞ்சிப்பாளையம் பிரிவு அருகே உள்ள ஸ்ரீசக்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் சிறுவனை வீட்டுக்கு அழைத்துச் சென்ற நிலையில் நேற்று முன்தினம் இரவு ரித்திசுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று காலை மகனை அழைத்துக் கொண்டு வந்த சதாசிவம், ஸ்ரீசக்தி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் காலை 9 மணி அளவில் சிறுவன் ரத்தக் கசிவு காரணமாக இறந்து விட்டதாக மருத்துவர் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் கதறி அழுதனர்.

இச்சம்பவம் பற்றி அறிந்ததும் சிறுவனின் உறவினர்கள் மருத்துவமனை முன் திரண்டனர். சரியான சிகிச்சை அளிக்காததால் சிறுவன் உயிரிழந்ததாக கூறி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் தாராபுரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மறியலில் ஈடுபட்டவர்கள் திடீரென்று மருத்துவமனை மீது கற்களை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் சாளரக் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திருப்பூர் ஊரக காவலாளர்கள் மற்றும் வீரபாண்டி காவலாளர்கள் விரைந்து வந்தனர். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் திருப்பூர் தெற்கு காவல் உதவி ஆணையர் தங்கவேல், வடக்கு காவல் உதவி ஆணையர் அண்ணாத்துரை ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் சுமூக தீர்வு காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு சிறுவன் ரித்திசின் உடலை பெற்று அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.