கைதி சிங்காரம் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் - 4 போலீஸார் ‘சஸ்பென்ட்’
நெல்லையில், போலீஸ் வாகனத்தை மறித்து, கைதியை படுகொலை செய்த வழக்கில், எஸ்.ஐ உள்ளிட்ட 4 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 24-ம் தேதி நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சிங்காரம் என்ற கைதி, போலீஸ் வாகனத்தில் தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
நெல்லை கேடிசி நகர் செக் போஸ்ட் அருகே இந்த வாகனத்தை மடக்கிய மர்ம கும்பல், போலீசார் மீது மிளகாய் பொடி கலந்த தண்ணீரை பீய்ச்சியும், துப்பாக்கியை உடைத்துப் போட்டும், சிங்காரத்தை வெளியே இழுத்து சரமாரியாக வெட்டிச் சாய்த்தனர்.
மேலும் அந்த கும்பல் போலீஸ் வாகனத்தையும் அடித்து நொறுக்கி விட்டு தப்பிச் சென்றது.
பட்டப் பகலில், போலீஸ் முன்னிலையில் நிகழ்த்தப்பட்ட இந்த படுகொலையால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் கைதிக்கு பாதுகாப்பாக சென்ற ஆயுதப்படை எஸ்.ஐ வீரபாகு, காவலர்கள் பிரின்ஸ், பாலசுப்பிரமணியம் மற்றும் பிரகாஷ் ஆகியோரை இடைநீக்கம் செய்து காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.