தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ஓபிஎஸ் சசிகலா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்காக ஆளுநரைச் சந்தித்து தங்களை ஆட்சி அமைச்ச அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக இரு அணிகளும் தங்களுக்கான ஆதரவை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தனது அரசியல் முடிவு குறித்து ஜெயலலிதாவின் பிறந்த நாளான வரும் 24-ந் தேதி தெரிவிப்பதாக அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் தீபா திட்டமிட்டுள்ளார்.

மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தொண்டர்களையும் தீபா சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி நேற்று பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டர்களை தீபா சந்தித்துப் பேசினார்.

அப்போது சசிகலா ஓபிஎஸ் மோதலில் பல உண்மைகள் வெளிவருவதாக கூறினார். அதனால் தமிழக அரசியலில் தொடர்ந்து பல நல்ல மாற்றங்கள் வருவதாற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தார்.

அதே நேரத்தில் ஜெயலலிதா இருந்த இடத்தில் வேறு யாரையும் வரவிட மாட்டோம் என ஆவேசமாக தெரிவித்தார்.