அரசு விடுதியில் 12 வயது மாணவனுக்கு பாலியல் தொல்லை; உடன்பட மறுத்ததால் அடி, உதை...
கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் உள்ள அரசு விடுதி ஒன்றில் 12 வயது மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சமையல்காரரை காவலாளர்கள் கைது செய்தனர். உடன்பட மறுத்ததால் மாணவனை அடித்து துன்புறுத்தி உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் அரசு ஆதி திராவிடர் மாணவர் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் தங்கி படிக்கும் 12 வயது மாணவனுக்கு, அங்குள்ள ஊழியர்கள் இருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதற்கு மாணவன் இசையாததால் இருவரும் சேர்ந்து அந்த மாணவனை காட்டுமிராண்டித் தனமாக அடித்து, உதைத்துள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த மாணவன் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றான். இதுபற்றி ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் ரமேஷிடம் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தாசில்தார் ரமேஷ், குழித்துறை விடுதிக்கு அதிரடியாக சென்று விசாரணை மேற்கொண்டார்.
அந்த விசாரணையில், விடுதி சமையல்காரராக பணிபுரியும் பொன்மனை மங்கலத்தைச் சேர்ந்த விஸ்வாம்பரன் (45), சமையல் உதவியாளர் வில்சன் (52) ஆகியோர் மாணவனுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததும், மாணவன் உடன்பட மறுத்ததால் அவனைத் தாக்கியதும் உறுதியானது.
அதுமட்டுமின்றி இவர்கள் இருவரும் இதுபோன்று மேலும் பல மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் விசாரணயில் தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் இருவரும் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், இவர்கள் மீது மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
மகளிர் காவல் ஆய்வாளர் வனிதா, உதவி ஆய்வாளர் பிரேமா ஆகியோர் விசாரணை நடத்தி அரசு விடுதியின் சமையல்காரர் விஸ்வாம்பரன், உதவியாளர் வில்சன் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து அவர்களில் விஸ்வாம்பரனை காவலாளர்கள் கைது செய்தனர்.
உதவியாளர் வில்சன் தலைமறைவானதால் அவரை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.