அரசு பள்ளி மாணவர்களுக்கு தான் இனி எல்லாமே... அதகளம் பண்ணும் செங்கோட்டையன்.... குவியும் வாழ்த்துகள்!
அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கும் நிலை உருவாக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் கைவினைப் பொருள் கண்காட்சியொன்றைத் தொடங்கி வைத்துப் பேசினார் செங்கோட்டையன். அப்போது, தமிழகத்தில் இருந்து எத்தனை லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத இருந்தாலும், அவர்கள் அண்டை மாநிலத்திற்குச் சென்று தேர்வு எழுதும் நிலை இனி வராது. மேலும்,ஆசிரியர் பணியிடங்களில் காலியிடமே இல்லை என்ற நிலையை தமிழக அரசு ஏற்படுத்தும் என்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் இன்று முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வு பயிற்சி தொடங்குகிறது. பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று பிற்பகல் ‘நீட்’ தேர்வு பயிற்சியை தொடங்கி வைக்கிறேன். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 412 ‘நீட்’ தேர்வு மையங்களில் பயிற்சி தொடங்கும்.
மாணவர்களுக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலமும் பயிற்சி வழங்கப்படும். இதற்காக 3 ஆயிரத்து 200 ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழகத்திற்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்தியா முழுவதுமே ‘நீட்’ தேர்வை ரத்து செய்யலாம். கடந்த ஆண்டு தமிழகத்தில் 1 லட்சத்து 13 ஆயிரம் பேர் ‘நீட்’ தேர்வு எழுதினர். இந்த ஆண்டு 2 லட்சம் மாணவர்கள் தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு எழுத தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக ஆயிரம் மையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ‘நீட்’ தேர்வு எழுதியதில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 1,472 பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் 24 மாணவ- மாணவிகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடம் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு 1000 அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கும் நிலை உருவாக்கப்படும்.
இந்த ஆண்டு அரசு பள்ளி பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு புதிய பாட திட்ட புத்தகம் தேவைப்படும் அளவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 3 லட்சம் பிரதிகள் வழங்கியுள்ளோம். 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில புலமையை அதிகரிக்க சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
பெண் ஆசிரியர்களுக்கு பாலியல் தொல்லை இருந்தால் உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். ரகசியமாக புகார் கூற விரும்பினாலும் டோல்பிரி எண்ணான 14417 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். அவருடைய எண்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்
என கூறினார்.