ஜெயிலில் ராஜ வாழ்க்கை...!!! – சேகர் ரெட்டியின் ஆடம்பரம்
கணக்கில் காட்டாமல் கருப்பு பணம் வைத்திருந்தாக சேகர் ரெட்டி, சீனிவாசலு ரெட்டி, பிரேம், ராமச்சந்திரன், ரத்தினம் உள்பட பலர் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதில் பல கோடி பணம், நகை, ஆவணங்கள் சிக்கியது. இதையடுத்து சிபிஐ போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இதில், சேகர் ரெட்டி, முதலீடு செய்துள்ள சொத்துக்கள், நிறுவனங்கள் அடங்கிய ஆவணங்கள் மட்டும் ஆயிரம் கிலோ எடை உள்ளது வருமான வரித் துறையினர் கூறினர். இவர்களிடம் விசாரணை நடத்தி வருமான வரித்துறை அதிகாரிகள், சிபிஐ போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அனைவரும்,சென்னை, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலையில் உள்ள தனி அறையில் அவர்கள் அடைக்கப்பட்டு கண்காணித்து வந்தாலும், வீட்டில் இருப்பதை போலவே ஆடம்பரமாக உள்ளதாக புழல் சிறைத்துறையினர் கூறுகின்றனர்.
புழல் சிறையைப் பொறுத்த வரையில், குற்றம் செய்துவிட்டு உள்ளே வருபவர்களுக்கு, அங்கே எந்த துன்பமும் இல்லை. வீட்டில் இருப்பது போல் அனைத்தும் கிடைக்கிறது. அனைத்துக்கும் பணம் மட்டுமே தேவை. பணம் இருந்தால், போதும், அங்கு கிடைக்காது என்ற வார்த்தைக்கு அர்த்தம் இல்லாமல் போகும் என சிறை காவலர் ஒருவர் கூறினார்.
சிறைச்சாலைக்குள் செல்போன் அனுமதி கிடையாது என கூறுவதுண்டு. ஆனால், அங்கிருந்து செல்போனில் வெளியே எந்த நேரமும் பேசலாம் என்ற சூழல்தான் உள்ளது. அப்படி இருக்கும்போது, பணத்திலேயே திளைக்கும் சேகர் ரெட்டி போன்றவர்களின் நிலையை கேட்கவும் வேண்டுமா?
அவர்களுக்கு 3 வேளை சாப்பாடு வெளியில் இருந்து வரப்படுகிறது. பழங்களுடன் கூடிய வீட்டு உணவை, சிறையில் இருந்தபடியே சாப்பிடுகின்றனர். தேவைப்பட்டவர்களுக்கு, செல்போனில் தொடர்பு கொண்டு பேசுகின்றனர். உள்ளே காவலுக்கு இருக்கும் போலீசார் அவர்களை நன்கு கவனிக்கிறார்கள்.
இதனால், சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு, சிறையில் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. உள்ளே இருக்கும் சேகர் ரெட்டி ஆட்களை சந்திக்க, வெளியில் இருக்கும் தொழிலதிபர்களும், அரசியல் கட்சியினரும் ஆட்களை அனுப்பி பேசுகின்றனர்.
சேகர் ரெட்டி சிறைக்கு சென்றதில் இருந்து, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தினமும் போன் செய்யும், ஒரு முக்கிய அரசியல் பிரமுகர், “அவங்கள நன்றாக கவனிச்சுக்குங்க. நான் உங்களை கவனிச்சுக்குறேன். அவங்க எவ்வளவு சந்தோஷமா, நிம்மதியா இருக்காங்களோ, அதேபோல் நீங்கள் இருப்பீங்க.. பார்த்து நடந்துக்கோங்க” என கூறியதாக தெரிகிறது.
சிறையில் இருந்தாலும், சேகர் ரெட்டிக்கு சொகுசு வாழ்க்கையும, ஆடம்பர உச்சரிப்பும் குறையவில்லை என புழல் சிறைச்சாலை அதிகாரிகள் கூறுகின்றனர்.