விதிகளை மீறி கட்டிய சரவணா ஸ்டோருக்கு சீல் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னையில் துணிக்கடை, நகைக்கடை உள்பட வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வாங்குவதற்கு சரவணா ஸ்டோருக்கு ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.
பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள், இந்த கடைக்கு வருவதால், இதன் உரிமையாளர் சரவணா செல்வரத்தினம், பல கிளைகளை தொடங்கியுள்ளார்.
இதையொட்டி, கடந்த சில மாதங்களுக்கு முன் நெல்லையில், சரவணா ஸ்டோர் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டியுள்ளதாக, நெல்லையை சேர்ந்த சரத் இனிகோ என்பவர், மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் உள்பட பல்வறு துறை அதிகாரிகளிடம் புகார் செய்தார். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதைதொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில், சரத் இனிகோ மனு தாக்கல் செய்தார். அதில், விதிகளை மீறி கட்டப்பட்ட சரவணா ஸ்டோருக்கு சீல் வைக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கட்டிட வரைப்படம் மற்றும் பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி, அனைத்து துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து, அதற்கான ஆவணங்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, நெல்லையில் உள்ள சரவணா ஸ்டோர் கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டள்ளது அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.
எனவே இன்று மதியம் 2.30 மணிக்குள், மாவட்ட கலெக்டர் முன்னிலையில், சரவணா ஸ்டோர் கட்டிடத்துக்கு சீல் வைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.